அனுமதியின்றி பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஈரோடு கிழக்குத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14-ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன. திமுக மற்றும் நாதக கட்சிகள் போட்டியிடுகின்றன.
இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ம் தேதி தொடங்கியது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் மற்றும் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாக, அவர்கள் மீது பிஎன்எஸ்-171 பிரிவின் கீழ் ஈரோடு நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.