• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் உதவியாளர் உட்பட 11 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

தேனி மாவட்டம் உப்பார்பட்டியை சேர்ந்தவர் ஞானராஜன்! இவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்!

அதில், ‘‘தேனி மாவட்டம் வட வீரநாயக்கன்பட்டியில் அரசு நிலங்களில் இருந்து உரிய அனுமதி பெறாமல் ரூ.500 கோடி மதிப்புள்ள கிராவல் மணலை முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர் அன்னபிரகாசம் உள்ளிட்டோர் முறைகேடாக எடுத்துள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முறைகேடு நடந்துள்ளதாகவும், ஓ.பன்னீர்செல்வம், தனது உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசு நிலங்களிலிருந்து மணல் எடுத்த பிறகு அந்த அரசு நிலங்கள் தனியார் சொத்துக்களாக வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இதனை தொடர்ந்து, நடைபெற்ற வழக்கு விசாரணையில், ஓபிஎஸ்ஸின் உதவியாளர் முறைகேடாக கிராவல் மண் அள்ளியதாக அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து கனிமவள மற்றும் வருவாய் துறையை சேர்ந்த 11 அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.