தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக தவணை கோவிட் தடுப்பூசி முகாமினை நேற்று (ஜன.10) மாவட்ட கலெக்டர் முரளீதரன் துவக்கி வைத்து, தடுப்பூசி செலுத்தும் பணியை பார்வையிட்டார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மக்கள் அனைவரையும் கொரோனா நோய் தொற்றிலிருந்து பாதுகாத்திடும் வகையில், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், தேனி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 18 மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. தவிர மாதந்தோறும் அந்த பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்று இம்மாவட்டத்தில் 3,310 சுகாதார பணியாளர்களுக்கும், 3,179 முன்கள பணியாளர்களுக்கும், இணை நோய் கண்டுள்ள 60 வயதிற்குட்பட்ட 4,456 நபர்களுக்கும் முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்!
நிகழ்ச்சியில், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) மரு. ஜெகவீரபாண்டியன் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.