காங்கிரஸ் கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி காங்கிரஸ் கட்சியின் கொடியை எரித்த பாரதிய ஜனதா கட்சியினரை கைது செய்ய வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி தெரிவித்துள்ளார்.
தலைவர் ராகுல் காந்தியை பழிவாங்க துடிக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக இன்று நாகர்கோவிலில் அமைதியான வழியில் பேரணி நடத்திய இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மீது பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. கல் மற்றும் கண்ணாடி குப்பிகளால் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயத்திற்கு உள்ளாகியுள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் திரு தர்மராஜ் அவர்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் என்பதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அது மட்டும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியினர் புனிதமாக கருதும் எங்கள் கொடியையும் சாலையில் போட்டு எரித்துள்ளனர்.
இந்த தாக்குதலை நடத்திய பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ் மற்றும் அந்த கட்சியின் நிர்வாகிகளை கைது செய்து காவல் துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.