
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி 10 லட்சம் நிதி உதவி அளித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில், அருகே உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி 9-ஆம் தேதி அந்த மாணவி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19ஆம் தேதி உயிரிழந்தார்.
தஞ்சாவூரில் தங்கி படித்து வந்த அரியலூரை சார்ந்த பிளஸ் டூ மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.. மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் மத மாற்ற செய்ய அழுத்தம்தான் காரணம் என்றும் பேசப்படுகிறது! ஆனால் இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி இல்லத்திற்கு சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையிலான கட்சியினர் மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி 10 லட்சம் நிதி உதவி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை கூறுகையில், மாணவியின் குடும்பத்திற்கு உண்மையான நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும். பாஜகவின் போரட்டம் எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல. நீதி வேண்டும், நியாயம் வேண்டும். பாஜக எப்போதும் அரசியல் ஆதாயம் தேடாது என தெரிவித்தார்.
