பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான நடிகை குஷ்பு சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “வாக்களிப்பது ஜனநாயக கடமை மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. தயவுகூர்ந்து வாக்களியுங்கள். பாஜக தனித்துப் போட்டியிடுவது தவறில்லை, தைரியமாக போட்டியிட்டுள்ளோம். இந்த நேரத்தில் வெற்றி வாய்ப்பு குறித்து பேச முடியாது. பாஜக சார்பிலும் தற்போது பேச முடியாது, தேர்தல் நடத்தை விதிமீறலாகிவிடும். பாஜகவுக்கும் நோட்டாவுக்கும் போட்டி என சொல்லி சொல்லியே ஏற்கெனவே 4 பேர் சட்டசபைக்கு சென்றுவிட்டனர்.எனவே, நோட்டாவுடன் ஒப்பிட்டு பார்ப்பதை விட தமிழகத்தில் பாஜக இல்லவே இல்லை என்று கூறி வந்தபோது நாங்கள் வெற்றி பெற்று வந்துள்ளோம். பாஜக எத்தனையாவது இடம்பிடிக்கும் என்றெல்லாம் இப்போது எதுவும் கூறமாட்டேன் அப்படி கூறினால், அது தேர்தல் நடத்தை விதிமீறலாகிவிடும்” என்று கூறியுள்ளார்.