நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சூர்யா. பிரபல ரவுடியான இவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குன்றம் ஊராட்சியில் 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜயலட்சுமி சுயேட்சையாக போட்டியிட்டவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடந்த 20ம் தேதி நெடுங்குன்றம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் விஜயலட்சுமி கலந்துகொண்டு பதவியேற்றார். பின்னர் மேடையிலிருந்து விஜயலட்சுமி கீழே இறங்கிய போது அங்கு வந்த ஓட்டேரி காவல் நிலையம் போலீசார் அவரை கஞ்சா வழக்கில் கைது செய்து காவல் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இன்று நெடுங்குன்றம் ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் விஜயலட்சுமி சார்பாக தேர்தலில் அவருக்கு முன்மொழிந்த பன்னீர் மற்றும் வழிமொழிந்த பாலாஜி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதில் நெடுங்குன்றம் ஊராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டு உறுப்பினர்களில் விஜயலட்சுமி சிறையில் இருப்பதால் அவரைத் தவிர 14 வார்டு உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் கலந்து கொண்டனர். இதில் 12 வார்டு உறுப்பினர்கள் விஜயலட்சுமிக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து அவர் ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.