தமிழக கல்வி உலகில் முன்னேற்றத்தின் ஒளிக்கதிராகவும், சமூக சேவையின் சிகரமாகவும் திகழும் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் அவர்களின் 80 – வது பிறந்தநாள் விழா பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக கலந்து கொண்டு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

முதலாவதாக பள்ளி குழந்தைகள் ரோஜா பூ வழங்கி பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தனர் தொடர்ந்து மாணவர்களின் கல்வி வளர்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல்வி நிறுவனர் நாள் கல்வி உதவி தொகையாக 12 மாணவர்களுக்கு எட்டு லட்சத்தி ஐம்பதயிரம் ரூபாயும், பெரம்பலூர், சிறுவாச்சூர் மற்றும் சமயபுரத்தில் உள்ள கல்வி நிருவனங்களில் சிறப்பாக பணியாற்றிய 42 ஊழியர்களுக்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் மற்றும் கேடயமும் வழங்கி கௌரவிக்கபட்டார்கள்.

அதே போல் மாணவர்களுக்கு நிறுவனர் நாளை முன்னிட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நிறுவனர் நாள் கோப்பை மற்றும் பரிசு தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் பெரம்பலூர், சிறுவாச்சூர் மற்றும் சமயபுரத்தில் இயங்கி வரும் மருத்துவமனைகள் மூலம் நிறுவனர் நாளை முன்னிட்டு 80 கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், கண், பல், இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், நுரையீரல், மற்றும் பெண்கள் நலப்பிரிவு ஆகிய துறைகளில் நிபுணர் மருத்துவர்கள் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்கினர்.

முகாமில் ரத்த சர்க்கரை அளவீடு, இரத்த அழுத்தம் பரிசோதனை, உடல் எடை மதிப்பீடு, ECG, கண் பரிசோதனை, பல் சிகிச்சை, பெண்களுக்கு மருத்துவ ஆலோசனை, மற்றும் மருந்து வழங்கல் உள்ளிட்ட சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இந்த மருத்துவ முகாம் மூலம் பெரம்பலூர், திருச்சி அரியலூர் கடலூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 80,000 மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலுப்படுத்துவது, பசுமையை ஊக்குவிப்பது, மற்றும் வருங்கால தலைமுறைக்கு சுத்தமான, ஆரோக்கியமான இயற்கைச் சூழலை மேம்படுத்த பல்கலைக்கழக வளாகத்தில் 800 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியிலும் பங்கேற்று, “மரங்களை வளர்ப்பது மனிதகுலத்தை காப்பதற்கு சமம்” என்ற கருத்தை வலியுறுத்தினார்.

பின்னர் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், பல்கலைக்கழகத்தை சேர்ந்த 30000 மாணவர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது.
இந்த விழாவில்
மாண்பமை வேந்தர் சீனிவாசன் அவர்கள் பேசியதாவது :“எனது மதிப்பிற்குரிய ஆசிரிய பெருமக்களுக்கும், அன்பான மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய நாளை நான், என்னுடைய பிறந்த நாள் விழாவாக மட்டும் கருதவில்லை; மாறாக, அனைவரின் கல்வி முன்னேற்றத்தை கொண்டாடும் நாளாகவே பார்க்கிறேன்.
ஒரு எளிய சாதாரணகுடும்பத்தில் பிறந்தநான், சிறுவயதிலேயே, வறுமை சமூகத்தில் ஏற்படுத்தும் கடுமையான தாக்கத்தையும், அதன் வேதனைகளையும் நேரடியாக உணர்ந்தவன்.
நம்வாழ்வில் சந்திக்கும் துன்பங்களையும் தடைகளையும் கல்வியால் மட்டுமே வெல்ல முடியும் என்பதை அப்போது புரிந்துகொண்டேன். அதனால்தான் ஒருவரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய உண்மையான சக்தி கல்வியே என்ற உறுதியான நம்பிக்கையுடன் கல்வித்துறையில் என் பயணத்தைத் தொடங்கினேன். 1994 ஆம்ஆண்டு பெரம்பலூரில் முதல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய போது, என் மனதில் இருந்த ஒரே எண்ணம் நம் பகுதி மாணவர்கள், பெரிய நகரங்களில் உள்ள மாணவர்களைப்போலவே உலகத்தரமான கல்வியை பெற வேண்டும் என்பதே. அந்த இலக்குக்காகவே என் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணிக்கத் தீர்மானித்தேன். இன்று, அந்த முயற்சியின் பலனாக பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கனவுகள் நனவாகியிருப்பதை காணும்போது, என் மனம் அளவில்லா பெருமிதம் அடைகிறது.
இன்று நமது கல்விநிறுவனங்கள் எல்கேஜி, முதல் எம்பிபிஎஸ், எம்டி, பொறியியல், வேளாண்மை, சட்டம், மருந்தியல், செவிலியர், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஆசிரியர்கல்வி என அனைத்து துறைகளையும் உள்ளடக்கியுள்ளன. 40,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 5000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இணைந்து இயங்கும் இக்கல்விச்சாம்ராஜ்யம், ஒரு கல்வி பேரரசாக மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாகவும் உள்ளது.

2021 ஆம் ஆண்டு நமது கல்விக் குழுமம் பல்கலைக்கழகமாக உயர்ந்து, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் என்ற பெயரில், தமிழ்நாட்டின் முதல் தனியார் பல்கலைக்கழகமாக யு.ஜி.சி அங்கீகாரம் பெற்றது. இது என் வாழ்க்கையின் மறக்க முடியாத, மிகப் பெரும் மகிழ்ச்சியான தருணமாகும். எனினும், இந்தச்சாதனை என் தனிப்பட்ட வெற்றியல்ல; அது நம் அனைவரின் வெற்றியாகும். நான் எப்போதும் நம்புவது இது தான் மாணவர்கள் என்னை நோக்கி வருவதில்லை; மாறாக, நான் அவர்களை நோக்கிச்செல்வதே எனது கடமையும் பொறுப்பும். மாணவர்களின் கனவுகளை அறிந்து, அதை நிறைவேற்ற அவர்களுக்கு வழிகாட்டி, தேவையான கல்வி வசதிகளை ஏற்படுத்தி, அவர்கள் எதிர்காலம் சிறக்கச் செய்வதே என் வாழ்வின் குறிக்கோள். இன்று, நமது நிறுவனங்களில் கல்வி கற்ற பல மாணவர்கள், உலகம் முழுவதும் சிறந்த பதவிகளில் உள்ளனர். பலர் தொழில் முனைவோர்களாக உருவாகி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். இதுதான் எனக்கான உண்மையான பரிசு.
கல்வியோடு சமூகநலமும் இணைந்தே இருக்க வேண்டும் என்பது என் நிலையான நம்பிக்கை. அதனால் தான், மருத்துவமனைகள், இலவச சிகிச்சை முகாம்கள், பெண்கள் கல்விக்கான கட்டண சலுகைகள், விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்கள், ஊரக வளர்ச்சி திட்டங்கள் போன்ற பல சமூகப்பணிகளை மேற்கொண்டுள்ளேன். தொழில் துறையில், ஹோட்டல், சர்க்கரை ஆலை, மருந்தகம் போன்ற பலதுறைகளில் நான் நுழைந்திருந்தாலும், என் மனதில் எப்போதும் சமூக நலமே முதன்மை ஆகும்.
இன்று நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம், என் உழைப்பு, ஒழுக்கம், உறுதி மற்றும் உயர்வை நோக்கிய எண்ணமே ஆகும் .
நம்பிக்கையுடன், கனவுகளை உண்மையாக்க கடினமாக உழைத்தால், ஒரு நாள் சமூகத்தின் ஒளிக்கதிர்களாக எல்லோராலும் விளங்க முடியும்.
என் மீது நீங்கள் காட்டும் அன்பு, மரியாதை அனைத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். உங்களது நம்பிக்கை, என் வாழ்க்கையின் மிகப் பெரிய வலிமை. அந்த நம்பிக்கையை வாழ்நாள் முழுவதும் காக்கும் உறுதிமொழியுடன் இன்று இந்த பிறந்த நாளை கொண்டாடுகிறேன்”. இவ்வாறு அவர் பேசினார்.