தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 6 ஆம் தேதியும் தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களுக்கு அக்டோபர் 9ஆம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. கடந்த 24 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரீசலனை செய்யப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்திற்குள்பட்ட மேல்மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
மாற்று வேட்பாளராக அவரது மகன் ப.செந்தில் குமார் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மேல்மருவத்தூர் ஊராட்சி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் லட்சுமி அம்மாள் போட்டியிட முடியாத சூழல் எழுந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்த ஊராட்சி பொதுத் தொகுதியாக மாறியதால் லட்சுமி போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரது மனு நேற்றைய தினம் ஏற்கப்பட்டது. இதையடுத்து மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்த செந்தில்குமார் தனது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி 3ஆவது முறையாக ஊராட்சி மன்றத் தலைவராக தேர்வாகியுள்ளார். ஏற்கெனவே அவர் இருமுறை போட்டியின்றி தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.