ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து தற்கொலைசம்பங்கள் அதிகரித்து வந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர்ச்சியாக பல லட்சம் பணத்தை இழந்ததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருகிறது.இதனால், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.இந்நிலையில் குழு அமைக்கப்பட்டு ஆலோசனை ,மற்றும் பொதுமக்களிடம் கருத்துகேட்பு நடத்தப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை சார்பாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆளுநரின் ஒப்புதலை பெற்று விரைவில் சட்டமாக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ஆன்லைனில் சூதாட்டம் நடத்தும் விளையாட்டுகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்படும் . அவசர சட்டத்திற்கு அக்.1 ம் தேதியே ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 17ம் தேதி கூடவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிரந்தர சட்டம் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.