சென்னையில்15 நாட்களுக்கு பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது என்று, மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு எதிரொலியாக தமிழகம் முழுவதும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அத்துடன், கார் சிலிண்டர் வெடிப்பு குறித்த விசாரணையை என்ஐஏ பிரிவுக்கு மாற்றியுள்ள நிலையில் உளவுப் பிரிவு போலீசாரும் ரகசிய கண்காணிப்பை முடுக்கி விட்டுள்ளனர்.
இது தவிர, ஒவ்வொரு மாவட்ட போலீசாரும் தங்கள் மாவட்டங்களுக்கு தகுந்தவாறு பாதுகாப்பு வியூகங்களை வகுத்துள்ளனர். அதன்படி, சென்னையிலும் பாதுகாப்பு, கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று பிறப்பித்த உத்தரவில், “சென்னையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு அக்டோபர் 30-ம் தேதி முதல்அடுத்த மாதம் 14-ம் தேதி இரவு 11 மணி வரை அமலில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.