30 வினாடிகளுக்கு ‘வீடியோ செல்பி’ எடுத்துக் கொடுத்தால், பொதுவான உடல்நலன் குறித்த 30 விதமான காரணிகளை கூறும் செயலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் டொரோன்டோவிலுள்ள நியூராலாஜிக்ஸ், ‘அனுரா’ என்ற செயலி மூலம் இதை சாதித்துள்ளது. இந்த செயலி மொபைல் மற்றும் கணினி ஆகிய இரண்டிலும் செயல்படும். ஒருவர் அரை நிமிடம் செல்பி எடுத்தால், அதை மருத்துவ ரீதியில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஒன்று அலசி ஆராயும்.
செல்பியில் தெரியும் நபரின் ரத்த அழுத்தம், மூச்சு விடும் வேகம், மனச்சுமை, செரிமானத் திறன் என்று உடல்நலத்துக்கு அடிப்படையான பல காரணிகளை இந்த செயலி அலசி, முடிவை அரை நிமிடத்தில் சொல்லிவிடுகிறது.
மனித தோலில் பிரதிபலிக்கும் ஒளி, அவரது ரத்த ஓட்டத்தையும் தெளிவாகக் காட்டும். இந்த தகவல்களை வைத்தே, நோயறிதல் பணியை நொடிகளில் முடித்து தருகிறது. அனுரா செயலியை ஒரு தேர்ந்த மருத்துவரின் ஆலோசனைக்கு மாற்றாக பயன்படுத்தக் கூடாது என, இதன் தயாரிப்பாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தினமும் தன் உடல்நலனை கண்காணிக்க வேண்டும் என்று நினைப்போருக்கு, அனுரா செயலி ஒரு உதவியாளர் தான் என, வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.