சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மதுரை தனக்கன்குளத்தில் அமைந்துள்ள சி.எஸ்.ஆர். தனியார் பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கோபிஷன் கொடியசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியபடி சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் ஸ்கேட்டிங் செய்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருநகரில் உள்ள சி.எஸ்.ஆர். பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, திருநகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று அண்ணா பூங்கா அருகே நிறைவடைந்தது. பேரணியை கண்ட பொதுமக்கள் மாணவர்களின் விழிப்புணர்வு முயற்சியை பாராட்டினர்.



