

யோக்கியன் திரைப்படத்தை திரையிட, திரையரங்கு கிடைக்காத காரணத்தால், தனது சொந்த ஆப்பில் திரையிட போவதாக, படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
நடிகர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் யோக்கியன், இப்படம் ஜூலை 28 முதல் தியேட்டர்களில் திரையிட முடிவு செய்த நிலையில், தமிழகத்தில் 10 திரையரங்கம் மட்டுமே கிடைத்ததால் படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஜெய் ஆகாஷ் A கியூப் மூவிஸ் ஆப் என்ற தனது சொந்த ஆப்பில் அதே நாளில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ஜெய் ஆகாஷ் பேசியது,
தியேட்டருக்கு ரசிகர்கள் பெரிய ஸ்டார் படங்கள், பெரிய பேனர் படங்களுக்கு மட்டுமே படம் பார்க்க வருகிறார்கள். சிறிய படங்களை தியேட்டர்காரர்கள் திரையிட மறுக்கிறார்கள். மக்களும் வந்து பார்க்க ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களை குற்றம் சொல்ல முடியாது. தற்போதைய நிலைமை இதுதான். இதனால் தான் ஏ கியூப் மூவிஸ்.ஆப் நான் தொடங்கினேன். இதுவரை அமேசான், நெட்பிளிக்ஸ் பார்த்து வந்தார்கள். அதில் மாத சந்தா கட்ட வேண்டும். ஆனால் ஏ.கியூப் மூவிஸ் ஆப்பில் அப்படி இல்லை .ஏ கியூப் ஆப்பை ஆண்ட்ராய்ட் போனாக இருந்தால் பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் போனாக இருந்தால் ஆப் ஸ்டோரிலும் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
அதில் படத்தின் டிரெய்லர் வரும் அது பிடித்திருந்தால் 50 ரூபாய் மட்டும் கட்டி யோக்கியன் படத்தை பார்க்கலாம். ஒரு நாள் முழுவதும் இப்படத்தை பார்க்க முடியும் வசதியான நேரத்தில் உலகின் எந்த மூலையிலிருந்தும் வீட்டிலிருந்தபடியே டிவியிலும் இதை கனெக்ட் செய்து பார்க்க முடியும். இதனால் மக்களுக்கு நேரம் மற்றும் தியேட்டருக்கு சென்றால் ஏற்படும் இதர செலவுகளையும் மிச்சம் செய்யலாம்.
A கியூப் ஆப்பில் 3 லட்சம் பேர் சந்ததாரர்களாக இருக்கிறார்கள். இதனால் படத்தின் மூலம் அசல் தவிர லாபமும் தயாரிப்பாளருக்கு கிடைக்கும். தற்போதைக்கு ஏ கியூப் ஆப்பில் வெளியிட எனது 3 படங்கள் ரெடியாக உள்ளது. படம் எடுத்துவிட்டு தியேட்டர் கிடைக்காமல் இருப்பவர்கள் தங்கள் படங்களை ஏ கியூப் ஆப்பில் வெளியிடலாம்.
அவர்களுக்கு முறையான கணக்கு வழங்கப்படும். அத்துடன் 80 சதவீதம் வருமான அளிக்கப்படும் 20 சதவீதம் மட்டுமே ஆப்பிற்காக பிடித்தம் செய்யப்படும் என்று கூறினார்.
