கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக 2010 ஆண்டு மதுரை – போடி இடையிலான மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு 465 கோடி ரூபாய் செலவில் அகல ரயில் பாதை அமைக்கும் பணி 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இதில் மதுரை முதல் ஆண்டிபட்டி வழியாக தேனி வரையிலான அகல ரயில்பாதை பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் மதுரையிலிருந்து உசிலம்பட்டி மற்றும் உசிலம்பட்டி – ஆண்டிபட்டிகான அதிவேக சோதனை ஓட்டங்கள் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. ஆண்டிப்பட்டி, தேனி வரை நிறைவு பெற்ற அகல ரயில்பாதையில் இறுதிக்கட்ட அதிவேக சோதனை ஓட்டம் மற்றும் ஆய்வு மத்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா தலைமையிலான குழுவினரால் நடைபெற்றது.
முன்னதாக ரயில்வே நிர்வாகத்தால் 120 கிலோ மீட்டர் வேகத்தில் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், ஆண்டிபட்டி தேனி இடையே ரயில் தண்டவாளங்களை கடக்க முயற்சி செய்ய வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தேனியிலிருந்து ஆண்டிபட்டி வரை 120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்த அதிவேக ரயில் சோதனை முடித்த பின்பு ஆண்டிப்பட்டியில் இருந்து மதுரை புறப்பட்டுச் சென்றது. மத்திய ரயில்வே பாதுகாப்புத் துறை ஆணையர் மனோஜ் ஆராரோ தலைமையில் இந்த சோதனை ஓட்டம் நிறைவு பெற்றுள்ளதால் விரைவில் மதுரை போடி அகல ரயில் பாதையில் பணிகள் முடிந்த மதுரை தேனி அதிவேக ரயில் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.