• Wed. Apr 24th, 2024

அஜித்தால் என் மனைவியிடம் திட்டு வாங்கினேன் ‘ நடிகர் ஷாம்

Byதன பாலன்

Jan 13, 2023

விஜய் நடிப்பில் முதன்முறையாக தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில்வெளியாகியுள்ள படம் வாரிசுஇந்தப்படத்தை
தில் ராஜு தயாரித்துள்ளார்.

விஜய் படங்களை பொறுத்தவரை அவருடன் அந்த படத்தில் இணைந்து நடிக்கும் அத்தனை நட்சத்திரங்களும் ரசிகர்களிடம் கவனம் பெறுவார்கள். அந்தவகையில் வாரிசு படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகிபாபு என பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர்.

குறிப்பாக படத்தில் விஜய்யின் அண்ணன் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் அவருடன் இணைந்து பயணித்துள்ள நடிகர் ஷாமின் நடிப்பிற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
வாரிசு படத்தின் வெற்றியிலும் அதற்கு கிடைத்துவரும் வரவேற்பிலும் உற்சாகமடைந்துள்ள நடிகர் ஷாம், வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து பல சுவாரசியமான செய்திகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

“20 வருடங்களுக்கு முன்பு குஷி என்கிற படத்தில் அவருடன் ஒரே ஒரு காட்சியில் இணைந்து நடித்து இருந்தேன். அதன்பிறகு இப்போது வாரிசு படத்தில் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் விதமாக அவரது சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த் என பல சீனியர்கள் நடித்திருப்பதால் வாரிசு குடும்பத்தில் நான் தான் ஜூனியர் என்று கூட சொல்லலாம்.

மாஸ்டர், பீஸ்ட் படங்களுக்கு பிறகு குடும்ப ரசிகர்களையும் கவரும் விதமாக ஒரு படம் பண்ண வேண்டும் என விஜய் சார் நினைத்தார். அதைத்தொடர்ந்தே அவர் வம்சி பைடிப்பள்ளியை அழைத்து கதை கேட்டார். அவர் கூறிய கதை பிடித்துப்போகவே, உடனே ஒப்புக்கொண்டு விட்டார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பில் நிறைய விஷயங்களை விஜய் சாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். படப்பிடிப்பில் உடன் நடிக்கும் எந்த நடிகர்களையும் ஈகோ இல்லாமல் பார்த்துக்கொண்டார். எந்த ஒருவரை பற்றியும் தவறாக ஒரு வார்த்தை பேச மாட்டார். படப்பிடிப்பின்போது அவர் போன் பயன்படுத்தவே மாட்டார். அப்படியே யாரிடமாவது பேசவேண்டும் என்றாலும் உணவு இடைவேளையில் மட்டுமே பேசுவார்.. அதை பார்த்துவிட்டு நானும் படப்பிடிப்பு சமயங்களில் எனது போனை தூக்கி போட்டுவிட்டேன். படப்பிடிப்பு சமயத்தில் எல்லோருடனும் கலகலப்பாக பேசுவார். மற்ற நேரங்களில் பெரும்பாலும் அடுத்து நடிக்க கூடிய காட்சிகளை பற்றியே தான் அவர் அசை போட்டுக்கொண்டிருப்பார். அதேபோல எந்த ஒரு காட்சிக்கும் ரிகர்சல் பார்க்க மாட்டார். என்னுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என்னிடம் அதுபற்றி சிறிதாக கலந்துரையாடுவார். அதன்பிறகு நேரடியாக டேக் போய்விடுவார் அப்போது ஒரு மேஜிக் நடத்துவார் பாருங்கள், நிச்சயம் நம்மால் பிரமிக்காமல் இருக்க முடியாது.
கதாநாயகி ராஷ்மிகாவை பொருத்தவரை அவர் தேசிய அளவில் பிரபலம் ஆனவர். படப்பிடிப்பில் எப்போதுமே எனர்ஜிடிக்காக சுறுசுறுப்பாக இருப்பார். ஆனால் அவர் ஆரம்பத்தில் இருந்தே தீவிரமான விஜய் ரசிகை என்பதால். படப்பிடிப்பு தளத்தில் பெரும்பாலான நேரங்களில் அவர் விஜய்யையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பார். அந்த அளவிற்கு விஜய்யுடன் இணைந்து நடிப்பதையே நம்பமுடியாதது போல தான் காட்சியளித்தார்.
பிரகாஷ்ராஜூடன் படப்பிடிப்பு இருக்கும் சமயங்களில் அவர்தான் அனைவருக்கும் தன் வீட்டிலிருந்தே சாப்பாடு வரவழைத்து தருவார். அவருக்கு பெரும்பாலும் கண்களாலேயே பேசும் பவர் இருக்கிறது. அதேபோல சரத்குமாரும் நானும் ரெகுலராக ஜிம் செல்பவர்கள் என்பதால் படப்பிடிப்பின்போது காலையில் நான்கரை மணிக்கே எழுந்து ஒன்றாகவே ஜிம்முக்கு சென்று விடுவோம். இந்த படத்தில் பிரபு சாருடன் நடித்தது புதிய அனுபவம் என்றாலும் அவருக்கும் எனக்குமான காட்சிகள் கொஞ்சம் குறைவுதான்.விஜய் சாரிடம் பேசும்போது, எப்படி அண்ணா நாளுக்கு நாள் இளமை ஆகிக்கொண்டே போகிறீர்கள், இதற்காக என்ன உணவு கட்டுப்பாடு மேற்கொள்கிறீர்கள் என கேட்டால், தினசரி பூரி, பொங்கல் தான் சாப்பிடுகிறேன், எப்பவாவது உடற்பயிற்சி செய்கிறேன் என சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.
படப்பிடிப்பு முடிவடைந்ததும் எங்களை எல்லாம் அவரது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து அசத்தினார். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்தமான உணவு அயிட்டங்களை அந்த விருந்தில் சேர்த்து இன்னும் ஆச்சர்யப்படுத்தினார். அப்போது தன் வீட்டில் உள்ள பணியாளர்களை எல்லாம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு தன் கையாலேயே அனைவருக்கும் பார்த்து பார்த்து பரிமாறினார்.
குஷி படத்தில் ஒரு சிறிய காட்சியில் மட்டுமே அவருடன் நடித்திருந்தாலும் அதன்பிறகு சில வருடங்கள் கழித்து நான் ‘12 பி’ படத்தில் நடித்தபோது அதை பார்த்துவிட்டு எனக்கு வாழ்த்து தெரிவித்தார். தெலுங்கில் நடித்த கிக் படத்தில் நன்றாக நடித்திருப்பதாக அந்த சமயத்திலும் அழைத்து வாழ்த்தினார்.
வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு தயாரிப்பாளர் தில் ராஜு பல தெலுங்கு விநியோகஸ்தர்கள், சில தயாரிப்பாளர்களை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட அவர்கள், அங்கே கூடியிருந்த கூட்டத்தையும் ரசிகர்களின் ஆரவாரத்தையும் பார்த்து பிரமித்துப்போய் இது இசை வெளியீட்டு விழாவா, இல்லை ஏதாவது விருது வழங்கும் விழாவா, இவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறதே என தங்களது வியப்பை வெளிப்படுத்தினார்கள்.
அஜித் சாருடன் இணைந்து நான் நடிக்கவில்லை என்றாலும் அவருடன் நெருங்கிய நட்பில் தான் இருக்கிறேன். அவரது மகளும் எனது மகளும் ஒரே பள்ளியில்தான் படிக்கிறார்கள். அதனால் அடிக்கடி பள்ளி சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது அவரை பலமுறை சந்தித்து பேசி இருக்கிறேன். அவர் தனது குழந்தைகள் சம்பந்தப்பட்ட பள்ளி நிகழ்வுகள் எதையுமே தவிர்க்க மாட்டார். ஒரு பெற்றோர் எப்படி தனது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் இருக்க வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக இருப்பார். நான் கூட சிலமுறை பள்ளிக்கு செல்வேன்.. சில நேரங்களில் எனது மனைவி மட்டுமே குழந்தைகள் விஷயமாக பள்ளிக்கு சென்று வருவார்.. அப்போது கூட அங்கே அஜித் வந்திருப்பதை பார்த்துவிட்டு வந்து, அஜித் சாரே அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவிட்டு தனது குழந்தைகளுக்காக வருகிறார்.. நீங்கள் ஏன் வரமாட்டேன் என்கிறீர்கள் என என்னை திட்டுவார். அஜித் சாரால் அப்படி பலமுறை என் மனைவியிடம் திட்டு வாங்கி உள்ளேன்.விஜய் சாரிடம் கூட பேசும்போது துணிவு படமும் வாரிசுடன் தான் வருகிறது என்று சொன்னபோது ஹை ஜாலி 2 படமும் வரட்டும்.. பார்ப்போம் என்று அதையும் பாசிட்டிவாகத்தான் அணுகினார்.. இன்னொரு விஷயம் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள்.. துணிவு படத்திலும் வில்லனாக நடிக்க முதலில் எனக்குத்தான் அழைப்பு வந்தது. ஆனால் இயக்குநர் வினோத் கேட்ட தேதிகளும் வாரிசு படத்திற்கான எனது தேதிகளும் ஒரேசமயத்தில் இருந்ததால் என்னால் துணிவு படத்தில் நடிக்க முடியாமல் போனது. இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர் என்பதால் இது தெலுங்கு படம் போலத்தான் இருக்கும் என பலரும் பேசி வந்தார்கள். ஆனால் இப்போது படத்தை பார்த்துவிட்டு அவர்கள் தங்களது கருத்தை மாற்றிக்கொண்டு இருப்பார்கள்.. வம்சியை பொறுத்தவரை தமிழை ரொம்பவே விரும்புபவர். படப்பிடிப்பில் கூட எல்லோருடனும் தமிழில்தான் பேசுவார். அவர் விஜய் ரசிகர்களை மனதில் வைத்துக்கொண்டே ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கியுள்ளார். நம் இயக்குனர்கள் விஜய்யை வைத்து உருவாக்கிய படங்களை விட இதில் அவர் இன்னும் ரசித்து ரசித்து செய்துள்ளார். படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் பெரும்பாலும் அதை உணர்வதாகவே தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதையும் பார்க்க முடிகிறது.. அடுத்ததாக இயக்குநர் விஜய் மில்டனின் டைரக்க்ஷனில் நடித்து வருகிறேன். அதைத்தொடர்ந்து சோலோ ஹீரோவாக நடிக்கவுள்ள ஒரு படமும் தயாராக இருக்கிறது என்றார் ஷாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *