மின்சார கட்டண உயர்வை கண்டித்து நாளை அதிமுக ஆர்ப்பாட்டம், சென்னை மட்டும் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். சென்னையில் மட்டும் 27-ந் தேதி (புதன்கிழமை) அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். 27-ந் தேதி காலை சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க திரண்டு வருமாறு சென்னை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சென்னையில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.