


தங்கள் பகுதிக்கு எந்த திட்டங்களையும் செய்யவிடாமல் தடுப்பதோடு தங்களை மாமன்ற கூட்டத்தில் ஒருமையில் பேசுவதாக கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தாம்பரம் மாநகராட்சியின் கூட்டம் இன்று மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.


இதில் கலந்துகொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் எந்தவிதமான அடிப்படை பணிகளும் நடைபெறவில்லை எனக் கூறி மாமன்ற கூட்டத்தில் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
அதிமுக ஆட்சி காலத்தை விட இப்பொழுது திமுக ஆட்சியில் அதிகப்படியாக வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது எனக் கூறியதோடு வரிகள் உயர்த்தப்பட்ட பிறகும் எங்கள் பகுதிகளில் எந்தவிதமான அரசு பணிகளையும் செய்ய அனுமதிக்காமல் நிதி ஒதுக்காமல் உள்ளீர்கள் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுக மாமன்ற உறுப்பினர்கள் நாங்கள் அப்படி தான் பேசுவோம். நீங்கள் அமைதியாக அமருங்கள் என ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி அதிமுக மாநகராட்சி மண்டலக்குழு எதிர்க்கட்சித் தலைவர் சேலையூர் சங்கர் பேசுவதற்கு மைக் கேட்டபோது திமுக மண்டல குழு தலைவர் வெ கருணாநிதி மைக் கொடுக்காமல் வைத்துக்கொண்டு அவர்களை பேச அனுமதிக்கவில்லை.
இதனால் மாமன்ற கூட்டம் முடிந்த பிறகும் திமுக மா மன்ற உறுப்பினர்கள் தங்களை அநாகரிகமாக நடத்துவதாக கூறியும் தங்கள் பகுதியில் எந்தவித திட்டங்களையும் செய்ய அனுமதிப்பதில்லை எனக் கூறியும் அரங்கை விட்டு வெளியே செல்லாமல் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

