• Mon. Apr 29th, 2024

அதிமுக முன்னாள் அமைச்சரின் மனைவிக்கு சிறைத்தண்டனை உறுதி..!

Byவிஷா

Nov 20, 2023

அதிமுக முன்னாள் அமைச்சர் ஏ.எம்.பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு விதித்த ஓராண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
1991-96 வரை அதிமுக ஆட்சி காலத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் பரமசிவன். அப்போது, அந்த குறிப்பிட்ட காலத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கடந்த 1998-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு நீண்ட ஆண்டுகளாக சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், முன்னாள் அமைச்சர் பரமசிவன் உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக ரூ.38 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவனின் மனைவி நல்லம்மாளுக்கு சிறை தண்டனை உறுதியானது. சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சொத்துகுவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பரமசிவனுக்கு 2 ஆண்டிகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. 2000ல் விதித்த தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது அதிமுக முன்னாள் அமைச்சர் பரமசிவன் 2015ல் காலமானார். இந்த நிலையில் மனைவிக்கு விதித்த தண்டனையை உறுதி செய்து, தண்டனையை அனுபவிக்க செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க தற்போது சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *