நான் கஷ்டப்படும் போது என்னை வீட்டிற்கு அழைத்து உனக்கு பணம் வாங்காமல் நான் படம் நடித்து தருகிறேன் என்று கூறி ஆறுதல் கூறியவர் விஜயகாந்த் என தேனி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி பிரச்சாரத்தில் பேசினார்.
தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி தேனி அருகே உள்ள அன்னஞ்சி, வடப்புதுப்பட்டி, பின்னதேவன்பட்டி, மதுராபுரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக பிரச்சாரம் நடைபெறும் இடத்திற்கு இரண்டு மணி நேரம் காலதாமதமாக வருகை தந்ததற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார்.
பின்னர் பேசிய நாராயணசாமி..,
என்னை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றி உங்களுக்கு தெரியும். என்னை தான் உங்களுக்கு தெரியாது. அவர்கள் இரட்டை இலையில் வெற்றி பெற்று தற்போது கட்சி வேஷ்டியை மாற்றிவிட்டார்கள். அடுத்ததாக எந்த கட்சி வேஷ்டியை மாற்றுவார்கள் என்று தெரியாது. டிடிவி தினகரன் கோயில் கட்ட பணம் கொடுத்ததாக கூறுகிறார். அதெல்லாம் உங்கள் பணம். ஜெயலலிதா அன்று ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, எனது தொகுதியை கவனித்துக் கொள் என்று பணத்தை கொடுத்து அனுப்பினார். ஆனால் டிடிவி தினகரன் நான் கட்டியதாக கூறுகிறார்.
விஜயகாந்த் வேறு யாரும் இல்லை என் சொந்தக்காரர் தான். என் அண்ணன். அவர் நான் கஷ்டப்பட்டபோது என்னை வீட்டிற்கு அழைத்து நான் உனக்கு பணம் வாங்காமல் படம் நடித்து தருகிறேன் என்று கூறி எனக்கு ஆறுதல் கூறியவர் என்று பிரச்சாரத்தில் பேசினார்.