விஜயபிரபாகருக்கு சிவகாசி மற்றும் விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றுத் தரும் பூத் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்களுக்கு விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக எடப்பாடி பழனிச்சாமி கையினால் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் என அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் இரவோடு, இரவாக அறிவிப்பை வெளியிட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகர் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து இரவு பகல் பாராமல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் .பிரச்சாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் 2 தினங்களே உள்ள நிலையில் விஜயபிரபாகரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பது குறித்து
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசி அருகே திருத்தங்கள் பகுதியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் நிர்வாகிகளிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அதிக வாக்குகள் பெற்றுத் தரும் 10 பூத்களுக்கு ஒரு பூத்திற்கு 1 பவுன் தங்க மோதிரம் வீதம் 10 மோதிரம் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 3 ஒன்றிய செயலாளர்கள், 4 பகுதி செயலாளர்கள் உள்ள நிலையில் அதில் அதிக வாக்குகள் பெற்றுத் தரும் முதல் நபருக்கு ஒன்றரை பவுன் தங்க மோதிரமும், அடுத்த 2 நபர்களுக்கு தலா 1 பவுன் தங்க மோதிரமும் வழங்கப்படும்.
இதேபோன்று விருதுநகர் சட்டமன்ற தொகுதியிலும் 10 பூத்களுக்கு ஒரு பூத்திற்கு 1 பவுன் தங்க மோதிரம் வீதம் 10 மோதிரம் வழங்கப்படும் எனவும், விருதுநகரில் 5 ஒன்றிய செயலாளர்கள் மற்றும் ஒரு நகர செயலாளர்கள் உள்ள நிலையில் அதில் அதிக வாக்குகள் பெற்றுத் தரும் முதல் நபருக்கு ஒன்றரை பவுன் தங்க மோதிரமும், அடுத்த 2 நபர்களுக்கு தலா 1 பவுன் தங்க மோதிரமும் வழங்கப்படும் எனவும், இவைகள் அனைத்தும் விருதுநகர் மாவட்ட அதிமுக சார்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கரங்களால் தங்க மோதிரம் அணிவிக்கப்படும் எனவும், கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
இரவோடு இரவாக கே.டி.ராஜேந்திரபாலாஜி தங்க மோதிரம் குறித்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதால் அதிமுக நிர்வாகிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தேர்தலுக்கு 2 நாட்களே உள்ள நிலையில் போட்டி போட்டுக் கொண்டு பணி செய்ய துவங்கியுள்ளனர்.