திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் அருகே நடந்த காதல் திருமண தகராறில் 15 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தமிழகத்தின் உயர் காவல்துறை அதிகாரியான ஏடிஜிபி ஹெச்.எம். ஜெயராம் நேற்று கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை, அரசு உள்துறை செயலாளர் இன்று வெளியிட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கத்தை சேர்ந்த இளைஞருக்கும் தேனியை சேர்ந்து பெண்ணுக்கும் காதல் திருமணம் நடந்தது. இதில் அந்த பெண்ணை மீட்பதற்காக, அந்த இளைஞரின் சகோதரரான 17 வயது சிறுவனை கூலிப்படை வைத்து பெண் வீட்டார் கடத்தியதாக கூறப்படுகிறது. இதில் புரட்சி பாரதம் கட்சி தலைவரும், எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பெண்ணின் தந்தை உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே கைதில் இருந்து தப்பிக்க தலைமறைவான பூவை ஜெகன் மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
இதனிடையே சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமனுக்கும் தொடர்பு இருப்பதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து பூவை ஜெகன் மூர்த்தி மற்றும் ஏடிஜிபியை நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இருவரும் ஆஜராகவில்லை எனில் கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் இருவரும் நேற்று பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
அப்போது விசாரணை மேற்கொண்ட உயர்நீதிமன்றம், பூவை ஜெகன் மூர்த்தியின் முன் ஜாமீன் மனுவை ஜூன் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து, போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அறிவுறுத்தினர். மேலும் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து சிறையில் அடைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜெயராமன் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, அவரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.