சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை தமிழின் தலைநகராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், தமிழ் மொழி குறித்த ஆய்வுகளை மதுரையை மையமாக வைத்து நடத்த வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன்,”கீழடி ஆய்வில் கிடைக்கும் ஆதாரங்கள் பெருமைக்குரியவை. இன்னும் நமது தொன்மை கண்டுபிடிக்க வேண்டும். இதே போல் குமரி கண்டம் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும். அப்போது தமிழன் உலகின் முதல் நிலை மனிதனாக உயர்ந்து நிற்பான் என்பதில் சந்தேகம் இல்லை என்பது தெரியவரும்.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை தமிழின் தலைநகராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தமிழ் மொழி குறித்த ஆய்வுகளை மதுரையை மையமாக வைத்து நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார். வஉசி சிலை மற்றும் மணிமண்டபம் குறித்த முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கதக்கது என்றும், புதிய கவர்னருக்கு வாழ்த்துக்கள் தமிழகம் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கும் என உறுதியேற்போம்” எனத் தெரிவித்தார்.