தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நாளை நடைபெறுகிறது. இதற்காக, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று (17ம் தேதி) மாலையுடன் நிறைவடைந்தது.
இந்நிலையில், தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், தலைமைக்கு எதிராக தனித்து களமிறங்க திட்டமிட்டு சுயேட்சையாக போட்டியிடுகின்றனர். இதன் காரணமாக அவர்கள், தலைமைக்கு எதிராக செயல்பட்டவர்கள் என கட்டம் கட்டப்பட்டு, கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே, திமுக வேட்பாளர் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட திமுக நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 45 திமுக நிர்வாகிகள் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இதுவரை 140-க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகளை தற்காலிக நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.