குளச்சல் ரீத்தாபுரத்தை சேர்ந்தவர் வர்கீஸ். இவர் நேற்று இரவு திங்கள்நகரில் இருந்து அழகிய மண்டபத்திற்கு காரில் வந்தார். காரில் அவரது மகள் ஆஷா, ஆஷாவின் மகள் செரியா ஆகியோர் அமர்ந்திருந்தனர். கார் பரம்பை ரயில்வே மேம்பாலம் அருகே வந்த போது வழி தெரியாமல் ரயில்வே துறையினர் போட்டு இருந்த மண்பாதையில் சென்று விட்டனர். சிறிது தூரம் சென்றதும் பாதை மாறிவிட்டதை உணர்ந்த வர்கீஸ் காரை பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கார் ரயில்வே தண்ட வாளத்தில் கவிழ்ந்தது. அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் துரிதமாக செயல்பட்டு தங்கள் செல்போன் வெளிச்சம் மற்றும் செய்கைகள் மூலமும் சுமார் 300 மீட்டருக்கு முன்பாக ரயிலை நிறுத்தினர். இதுபற்றி திங்கள்நகர் தீயணைப்பு நிலையம், ரயில்வே துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வந்த ரயில் இரணியல் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கயிறு மூலம் காரை கட்டி இழுத்து மீட்டனர். இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரயில்கள் இயக்கப்பட்டன. பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தியதால் தாய்-மகள் உட்பட 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.