காட்டு யானை காரை சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குஞ்சப்பனை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஒரு கார் நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் நின்ற ஒரு காட்டுயானை தழைகளை தின்று கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் கார் ஓட்டுநர் யானையை விட்டு சற்று ஒதுங்கியவாறு வாகனத்தை இயக்கியுள்ளார்.
இதனால் திடீரென மிரண்ட யானை வேகமாக ஓடி காரின் முன்பகுதியை துதிக்கையால் தாக்கி சேதப்படுத்தியது. இதனையடுத்து யானை பின்னோக்கி நகர்ந்ததும் ஓட்டுநர் விரைவாக காரை இயக்கி அங்கிருந்து சென்றார். இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சற்று தொலைவிலேயே வாகனத்தை நிறுத்தி விட்டனர். சிறிது நேரம் கழித்து யானை அங்கிருந்து சென்றது. இதற்கிடையில் காட்டுயானை காரை சேதப்படுத்திய வீடியோ காட்சிகள் சமூக வளைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.