சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் குடும்பத்தகராறு காரணமாக, குழவிக் கல்லைத் தலையில் போட்டு, வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள பள்ளபட்டி, முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்தவர் மாரிச்செல்வம் (33). இவரது மனைவி பிரியா (29). இவர்களுக்கு அய்யனார் (7), பவித்ரா (4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மாரிச்செல்வம் லோடுமேனாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு ஆளான இவர் தினமும் போதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். குழந்தைகளையும் அடித்து உதைத்து வந்தார். தினமும் குழந்தைகளுடன் சேர்ந்து அடி வாங்குவது குறித்து பிரியா தனது அண்ணன் மகேந்திரனிடம் கூறி அழுதார். தங்கை அழுகையைப் பார்த்த மகேந்திரன், மாரிச்செல்வத்தை நேரில் சென்று கண்டித்துள்ளார். ஆனாலும் திருந்தாத மாரிச்செல்வம் வழக்கம் போல குடி போதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து விட்டு வீட்டிற்குள் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த பிரியாவின் அண்ணன் மகேந்திரன், ஆத்திரமடைந்து வீட்டில் இருந்த குழவிக் கல்லை எடுத்து மாரிச்செல்வத்தின் தலையில் போட்டார். இதில் தலை நசுங்கி படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, மாரிச்செல்வத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமறைவான மகேந்திரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.