விருதுநகர் மாவட்டம் நரிக்குடியைடுத்த வந்தவாசி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 43).இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த குண்டுமலை குடும்பத்தினருக்கும் கோயில் வரி செலுத்துவது தொடர்பாக நெடுங்காலமாக முன்பகை இருந்து வருகிறது.

இந்நிலையில் கருணாநிதியின் 15 வயது மகளான சிறுமி தாரணி ஆடு மேய்த்துவிட்டு வீட்டிற்கு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது நான்கு பேர் கொண்ட கும்பல் சிறுமி மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதி வேகத்தில் வந்த கார் சிறுமியின் மீது மோத முயன்றபோது சிறுமி விலகியதால் கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரம் இருந்த வயல்காட்டில் புகுந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த கருணாநிதி காரில் வந்தவர்களை தட்டிகேட்டபோது காரிலிருந்து இறங்கிய இளைஞர்கள் ஆவேசத்துடன் கீழே கிடந்த கட்டைகளை எடுத்து தாக்க முயன்றதுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

முன்பகை காரணமாக குண்டுமலையின் மகன் ஆனந்தராஜ்(32) என்பவரின் தூண்டுதலின் பேரில் காரில் வந்த கும்பல் தனது மகளை காரை ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டு தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சிறுமியின் தந்தை கருணாநிதி கொடுத்த புகாரின் பேரில் அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமி மீது கார் ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்டது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற இளைஞர்களை தேடி வருகின்றனர்.





