இருநூறுக்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் தொடர்புடைய ஒருவருக்கு பா.ஜ.க.வில் மாநில பதவி வழங்கியிருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல ரவுடி சூர்யா (34) மீது பீர்க்கன்கரணை, ஓட்டேரி, சேலையூர், மணிமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 60 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தலின் போது இவரது மனைவி விஜயலட்சுமி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்ற அவருக்கு பாஜக மகளிர் அணியில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பாஜகவில் இணைய நெடுங்குன்றம் சூர்யா வந்த போது போலீசார் அவரை கைது செய்ய திட்டமிட்டனர். இதை தெரிந்து கொண்ட அவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
பின்னர் ஒருங்கிணைந்த மனிதநேய அம்பேத்கர் கூட்டமைப்பை தொடங்கி நிறுவனராக செயல்பட்டு வந்தார். இதனிடையே பல வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். கடந்த சில மாதங்களாக ஜாமீனில் வெளியே இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாஜகவில் சேர்ந்த நெடுங்குன்றம் சூர்யாவிற்கு நேற்று மாநில பதவி வழங்கப்பட்டுள்ளது. பாஜக மாநில பட்டியலினப் பிரிவு செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பாஜக செய்யும் நல்ல காரியங்கள் பிடித்துள்ளதால், கட்சியில் சேர்ந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இனி எந்த பிரச்சினையிலும் தலையிடப் போவது இல்லை என்றும், நீதிமன்றத்திற்கு சரியாக சென்று ஆஜராகி, வழக்கை முடிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.