• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் ஒரு விவசாயி உயிரிழப்பு

Byவிஷா

Feb 16, 2024

டெல்லியில் தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில், விவசாயி ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் பயிர்களுக்கான விலை நிர்ணயம், விவசாய கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் இழப்பீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ‘டெல்லி சலோ’ என்று தலைநகரை நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஹரியானாவின் அம்பாலாவுக்கு அருகில் உள்ள ஷம்பு எல்லையில் டெல்லி சலோ பேரணி போராட்டத்தில் கலந்துகொண்ட பஞ்சாபை சேர்ந்த 63 வயதான விவசாயி கியான் சிங் என்பவர் இன்று மாரடைப்பால் காலமானார். டெல்லி சலோ போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கியான் சிங், இன்று காலையில் நெஞ்சுவலி என கூறியதை அடுத்து, பஞ்சாபின் ராஜ்புராவில் உள்ள சிவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து, பாட்டியாலாவில் உள்ள ராஜிந்திரா மருத்துவமனைக்கு கியான் சிங் கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது விவசாயிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபின் குர்தாஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கியான் சிங், விவசாயிகளின் ‘டெல்லி சலோ’ பேரணியில் பங்கேற்பதற்காக 2 நாட்களுக்கு முன்பு ஷம்பு எல்லைக்கு வந்ததாக கூறப்படுகிறது.