சிவகங்கை மாவட்டம், இளையான்குடி காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் மதுபோதையில் தகராறு செய்வதைத் தட்டிக்கேட்ட எஸ்.ஐ-ன் மண்டையை உடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழப்பூவந்தியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துப்பாண்டி (32). இவர் இளையான்குடி காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிகிறார். நேற்று முன் தினம் முத்துப்பாண்டி பூவந்தி கடை வீதியில் உள்ள சலூன் கடைக்காரான பாஸ்கரன் என்பவரிடம் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் சலூன் கடைக்காரர் பாஸ்கரன் போர் வண்டி சோதனைச்சாவடியில் நின்று கொண்டிருந்த எஸ்ஐ பரமசிவத்திடம் போய் கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்ஐ பரமசிவம், தகராறில் ஈடுபட்ட முத்துப்பாண்டியை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து நேற்று காலை பூவந்தி சோதனைச் சாவடியில் பணியில் இருந்த எஸ்ஐ பரமசிவத்திடம் முத்துப்பாண்டி சென்று தகராறு செய்துள்ளார். நானும் போலீஸ்காரன் தான் என்றும் ஏற்கனவே என் மீது இரண்டு வழக்கு இருக்கிறது என்றும் என்னையவே கண்டித்து அனுப்புகிறாயா என்று தகராறு செய்து அருகிலிருந்த கல்லை எடுத்து தாக்கியதில் பரமசிவத்தின் பின்புறம் மண்டை உடைந்துள்ளது காயமடைந்த எஸ்ஐ பரமசிவம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து பூவந்தி போலீசார் வழக்கு பதிந்து முத்துப்பாண்டியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.