சென்னை தாம்பரம் அருகே ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என மூவர் மீதும், மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் வேல் நகர் பகுதியை சேர்ந்தவர், அலெக்சாண்டர், இவரது மனைவி கலாவதி, இவர்களது மகனான ஜோஸ்வா முத்தமிழ்வேந்தன் (வயது-14), மற்றும் 9 வயதில் பெண் ஒருவர் உள்ளார். இந்த நிலையில் அலெக்சாண்டர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததை அடுத்து கலாவதி தனது மகன் மகள் உடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் ஜோஸ்வா முத்தமிழ் வேந்தன் நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். கலாவதியும் வழக்கம் போல் தனது பணிக்காக சென்றுள்ளார். இதையடுத்து நேற்று காலை சுமார் பத்து மணியளவில் ஜோஸ்வா முத்தமிழ் வேந்தன் படித்து வரும் அரசு பள்ளியிலிருந்து ஆசிரியர் ஒருவர் கலாவதிக்கு தொடர்பு கொண்டு பள்ளிக்கு வருமாறு அழைத்துள்ளனர். ஆனால் கலாவதி தான் பணியில் இருப்பதால் தற்போது வர முடியாது மதியத்திற்க்கு மேல் வருகிறேன் என தெரிவித்துள்ளார், ஆனால் கலாவதி பள்ளிக்கு செல்லவில்லை. இதையடுத்து இரவு ஒன்பது மணி அளவில் பணியை முடித்துவிட்டு கலாவதி வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது வீடு உள்பக்கம் தாழிட்டு இருந்துள்ளது.
இதையடுத்து வெகு நேரம் கதவைத் தட்டியும் யாரும் திறக்காததால் அக்கம் பக்கத்தில் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அவரது மகன் ஜோஸ்வா முத்தமிழ் வேந்தன் தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார், பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர் இச்சசம்பவம் குறித்து தகவல் அறிந்த பீர்க்கன்காரணை போலீசார் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வந்தனர்.
அப்போது கலாவதி தன் மகன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளதாக கூறி கடிதத்துடன் புகார் ஒன்றை அளித்தார். அந்த கடிதத்தில் தான் சக மாணவரை ஒருவரை தாக்கியதாக என்மீது பொய்யாக குற்றம் சுமத்தி என்னை குற்றவாளி என கூறினார்கள், மேலும் தன்னை தப்பு தப்பாக கூறினார்கள் மேலும் தனது பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் எப்போதும் நீ ஏன் உயிரோடு இருக்க என திட்டி கொண்டே இருப்பார். எனவே தான் நான் இந்த முடிவை எடுத்தேன் என குறிப்பிட்டிருந்தது.
எனவே இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்யாத பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் எனது மகனை ஏன் உயிரோடு இருக்க என திட்டிய உதவி தலைமை ஆசிரியர் என் மகன் மீது வீண் பழி சுமத்திய ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்தார்.
புகாரின் அடிப்படையில் பீர்கன்காரனை காவல் ஆய்வாளர் மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஒருவர் என மூவர் மீது 107 பிஎன்எஸ் தற்கொலைக்கு தூண்டுதல் என ஒரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் பெருங்களத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது அடுத்த கட்டமாக வழக்கு பதிவு செய்யப்பட்ட மூன்று ஆசிரியர்களையும் காவல் நிலையத்திற்கு வரவைத்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவனை தற்கொலைக்கு தூண்டியதாக ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு
