• Fri. May 3rd, 2024

நீட் தேர்வு மதிப்பெண்ணில் குளறுபடி.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ByA.Tamilselvan

Oct 3, 2022

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கிறிஸ்மா விக்டோரியா என்ற மாணவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நீட் தேர்வுக்கான விடைத்தாளின்படி 720 மதிப்பெண்களுக்கு 196 மதிப்பெண் பெற்றிருந்தேன். அதன்பின், செப்டம்பர் 7-ம் தேதி வெளியான மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், எனது தேர்வு விடைகள் முறையாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க அசல் விடைத்தாளை காண்பிக்க தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்கு மாணவி வந்தால் விடைத்தாளை காண்பிக்க தயாராக இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதையடுத்து, நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமையில் விடைத்தாளை காண்பிக்கும் தேதியை 10 நாட்களுக்குள் மனுதாரருக்கு தெரிவிக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார். அதே தேதியில், தேசிய தேர்வு முகமைக்கு நேரில் சென்று விடைத்தாளை பார்வையிடவும் மாணவிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *