• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

நான் அரசியலில் இருந்து விலகத் தயார்!! – செல்லூர் ராஜூ

ByA.Tamilselvan

Sep 26, 2022

“கூட்டுறவுத் துறையில் ஊழல் நடைபெற்றதை நிதியமைச்சர் நிரூபித்தால், நான் அரசியலில் இருந்து விலகத் தயார்” என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 29-ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்றார். ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கடந்த ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் ஊழல் நடந்ததாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். அப்படி முறைகேடு நிரூபிக்கப்படவில்லை என்றால் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசியலில் இருந்து விலக தயாரா..?. கூட்டுறவுத் துறை அதிகாரிகள் பரிந்துரையில் நகைக்கடன், பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எப்படி தகுதி இல்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்ய முடியும்..?. அதிமுக ஆட்சியில் கலங்கம் இல்லாமல் கூட்டுறவுத் துறை செயல்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையில் சிறப்பாக செயல்பட்டமைக்கு அதிமுக ஆட்சியில் மத்திய அரசு வழங்கிய 27 விருதுகளை தமிழக அரசு சார்பில் நாங்கள் பெற்றுள்ளோம்.
அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் ஊழல் நடந்துள்ளதை நிரூபிக்க அவர் தயராக இருக்க வேண்டும். நிதி அமைச்சருக்கான தகுதி இல்லாத நபரை நிதி அமைச்சராக திமுக நியமித்துள்ளது. தமிழகத்தில் வரி உயர்வுக்கு காரணம் நிதி அமைச்சர் மட்டுமே. இல்லாததை சொல்லி அரசு மீது வெறுப்புணர்வு ஏற்பட நிதி அமைச்சர்தான் காரணம். 48 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக கூறிவிட்டு 13 லட்சம் பேருக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.