இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுவருகிறது. தமிழகத்திலும் டெங்கு காயச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்றே கூடியுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அப்படி உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டெங்கு பரவாமல் தடுக்க நோய்த்தடுப்பு முறைகள் முடுக்கிவிடப்பட்டாலும் வீடுகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசு உற்பத்தியாகிறது. எனவே கொசுக்கள் உற்பத்தியாவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது என ஒன்றிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் தேவையற்ற இடங்கள் மற்றும் பொருட்களில் மழைநீர் தேங்குவதை தடுக்கவும், திறந்திருக்கும் தண்ணீர் தொட்டிகளில் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.