உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் பில்கேட்ஸ் . மைக்ரோசாப்ட் நிறுவனரான இவர் உலகின் பல்வேறு சமூக நலன்சார்ந்த பணிகளுக்கு நன்கொடைகள் வழங்கி வருகிறார். தற்போது தனது அனைத்துசொத்துக்களையும் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார்.
பில்கேட்ஸ் 2000 ஆம் ஆண்டு பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையை தொடங்கினார். இந்த அறக்கட்டளையில் சுகாதாரம், கல்வி போன்ற பல துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பில் கேட்ஸ் இந்த மாதம் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குகிறார். இதுகுறித்து பில் கேட்ஸ் கூறியதாவது: எதிர்காலத்தில் எனக்கும் எனது குடும்பத்திற்கும் நான் செலவழிப்பதைத் தவிர எனது அனைத்து சொத்துக்களையும் அறக்கட்டளைக்கு வழங்க திட்டமிட்டுள்ளேன். நான் இந்தப் பணத்தைக் கொடுப்பதை தியாகமாக நினைக்கவில்லை. மிக பெரிய சவால்களைச் சமாளிப்பதில் நான் ஈடுபட்டிருப்பதை நான் பாக்கியமாக உணர்கிறேன். மேலும் எனது வளங்களை சமூகத்திற்குத் திருப்பித் தர வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். பில் கேட்ஸ் அவர்களின் மனிதாபிமானத்தை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.