மிஸ் இந்தியா அழகிப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். அதில் வெற்றி பெற்று மிஸ் இந்தியா-வாக தேர்வாகும் அழகிகள் உலக அழகிகள் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார்கள். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மிஸ் இந்தியா அழகிப் போட்டி மும்பையில் உள்ள ஜியோ கான்வகேஷன் செண்டரில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அழகிகள் ஒய்யார நடைபோட்டபடி கலந்துகொண்டனர். இவர்களில் கர்நாடகாவை சேர்ந்த சினி ஷெட்டி என்பவர் மிஸ் இந்தியாவாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு முன்னாள் மிஸ் இந்தியா அழகியான தெலுங்கானாவை சேர்ந்த மானசா வாரனாசி மகுடத்தை சூட்டிவிட்டார்.இதன்மூலம் 71-வது உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கெடுக்க சினி ஷெட்டி தேர்வாகி உள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த அழகிப் போட்டியில் ராஜஸ்தானை சேர்ந்த ருபல் ஷெகாவத் இரண்டாவது இடத்தையும், உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஷினடா சவுகான் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இந்த மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் நடிகைகள் நேகா துபியா, மலைகா அரோரா, டினோ மொரியா ஆகியோரும், கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் மற்றும் நடிகர்கள் ராகுல் கண்ணா, ரோகித் காந்தி, ஷியாமக் தவார் ஆகியோரும் ஜூரிக்களாக இருந்தனர். மேலும் இதில் சிறப்பு விருந்தினராக பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் கலந்துகொண்டார்.