இந்தியாவின் டாப் பணக்காரர்களின் ஒருவராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவராக முகேஷ் அம்பானி பதவி வகித்து வருகிறார். முகேஷ் அம்பானியின் குடும்பம் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்கார குடும்பங்களில் ஒன்று. உலகளவிலான பணக்காரர் பட்டியலிலும் தொடர்ந்து இடம்பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார்.
இந்த நிலையில் முகேஷ் அம்பானி தனது பிள்ளைகளுக்கு நிறுவனங்களை பிரித்து கொடுக்க முடிவு செய்துவிட்டதாக தகவல். முகேஷ் அம்பானிக்கு ஆகாஷ் அம்பானி , இஷா அம்பானி , ஆனந்த் அம்பானி என மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் பதவியை முகேஷ் அம்பானி நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டார். இதனை வர்த்தக நிறுவனங்களுக்கு முகேஷ் அம்பானி முறைப்படி தெரிவித்துவிட்டார்.
இதையடுத்து, ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் தலைவராக இஷா அம்பானி விரைவில் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இஷா அம்பானி பதவி வகித்து வருகிறார். ஆகாஷ் அம்பானியும், இஷா அம்பானியும் இரட்டையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அம்பானி குடும்பத்திலிருந்து இளம்தலைமுறையினர் உயர்பொறுப்புக்கு அடி எடுத்து வைப்பது அந்நிறுவனத்தை மேலும் வளர்ச்சி அடைய செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.