சூர்யா நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இடம்பெற்று வருகிறது.
திரையுலகில் மிகவும் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இவ்விருது விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளும் வழங்கப்படும். இந்த விருது விழாவில் பங்கெடுக்கும் படங்களுக்கு ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்கள் வாக்களிப்பர். அதில் அதிக வாக்குகளை பெறும் படத்திற்கோ அல்லது நடிகர், நடிகைகளுக்கோ இந்த விருது வழங்கப்படும். ஆண்டுதோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர்கள் விவரம் மாறுபடும், உலகளவில் இருந்து ஏராளமான பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பெறுவர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 397 பேர் அடங்கிய கமிட்டி உறுப்பினர் பட்டியலை ஆஸ்கர் அகாடமி குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
397 பேர் அடங்கிய பட்டியலில் இந்தியா சார்பில் நடிகர் சூர்யா, பாலிவுட் நடிகை கஜோல், இயக்குனர் ரீமா கக்டி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நடிகர் சூர்யா ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர் பட்டியலில் இடம்பெறுவது இதுவே முதன்முறை. இதன்மூலம் ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர் பட்டியலில் இடம்பெறும் முதல் தென்னிந்திய நடிகர் என்கிற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். இதற்கு முன்னர் நடிகர்கள் ஷாருக்கான், அமீர் கான், சல்மான் கான், அமிதாப் பச்சன், நடிகைகள் மாதுரி தீக்ஷித், வித்யா பாலன், பிரியங்கா சோப்ரா, இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் ஆகியோர் ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் நடிகர் சூர்யா இடம்பெற்றதையடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.