• Tue. Apr 30th, 2024

நிர்வாகிகள் கூட்டம் செல்லாது.. ஓ .பி.எஸ்

ByA.Tamilselvan

Jun 27, 2022

சென்னையில் இன்று கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் சட்ட விதிகளுக்கு புறம்பானதாகும். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரின் கையெழுத்தின்றி கூட்டப்பட்டுள்ள இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் கட்சி தொண்டர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது” என ஓ பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஓ பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது: அதிமுக சட்ட, திட்ட விதி 20A (V)-ன் கீழ் கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாக பொறுப்புகள் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது. அதன்படி இருவரின் ஒப்புதலை பெற்றுத்தான் எந்தவிதமான கூட்டமும் கூட்டப்பட வேண்டும். ஆனால் இருவருடைய ஒப்புதலுமின்றி கையொப்பம் இல்லாமல் தலைமை நிலைய செயலாளர், தலைமை கழகம் என்ற பெயரில் சட்ட திட்ட விதிக்கு எதிராக ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கேட்டு கொண்டதற்கிணங்க 27.06.2022 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு தலைமை கழகமான எம்ஜிஆர் மாளிகை கூட்ட அரங்கில் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அந்த கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் நான் எந்தவிதமாக ஒப்புதலையும் மேற்படி கூட்டத்திற்கு அளிக்கவில்லை. இபு்படிப்பட்ட நிலையில் விதியை மீறி கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டம் கட்சியின் சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பானதாகும். கட்சியின் சட்ட திட்டத்துக்கு புறம்பாக கூட்டப்பட்டுள்ள மேற்படி கூட்டத்தில் ஏதேனும் முடிவுகள் எடுக்கப்பட்டால் அது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணை்ப்பாளர் நிர்வாகத்தில் இருக்கும் கட்சி, தொண்டர்களை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *