மதுரை மாவட்டம், சோழவந்தான் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் சத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில், பணியில் இருந்த சத்துணவுப் பணியாளர் மாணவிக்கு முட்டை வழங்க மறுத்த தாகவும் மாணவி முட்டை கேட்ட போது தகாத வார்த்தையில் பேசி மாணவியை சத்துணவு பணியாளர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் மாணவியின் உறவினர் ஏன் மாணவியை சத்துணவு பணியாளர் தகாத வார்த்தையில் பேசினார் என பள்ளி ஆசிரியர்களிடம் மாணவியன் உறவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோழவந்தான் சத்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்குப் பல ஆண்டுகளாகச் சத்துணவுப் பணியாளராகத் தேவி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், இன்றுமதிய உணவின்போது சில மாணவிகளுக்கு வழங்க வேண்டிய முட்டையை அவர் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதைக் கேட்ட மாணவிகளை அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தாக்கியதாகவும் மாணவிகள் கூறுகின்றனர்.

இந்த சம்பவ குறித்து அந்த மாணவி தனது உறவினரிடம் தெரிவித்த நிலையில் ஆத்திரமடைந்த மாணவியின் உறவினர் பள்ளிக்கு வந்து சத்துணவுப் பணியாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அரசு வழங்கும் சத்துணவு மற்றும் முட்டைகளை முறையாக வழங்காமல் அலட்சியமாகச் செயல்படுவதோடு, குழந்தைகளைத் தாக்கும் பணியாளர் மீது ஏன் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் பள்ளியில் இருந்த ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் பள்ளியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
சத்துணவு விவகாரம் ஒருபுறமிருக்க, அப்பள்ளியில் போதிய கழிவறை வசதிகள் இல்லை என்றும், பள்ளியைச் சுற்றிக் சுற்றுச் சுவர் கூட இல்லை என்றும் பெற்றோர்கள் வேதனை தெரிவித்தனர்.

அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
சத்துணவு மற்றும் முட்டைகளைச் சரிவர வழங்காத சத்துணவுப் பணியாளர் மீது உரிய விசாரணை செய்து தவறு நடந்திருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



