தேனியில் உள்ள பண்ணை வீட்டில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை .பாஜக நிர்வாகிகளும் சந்தித்தனர் .
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஓபிஎஸ் தனது பண்ணை வீட்டில் அவர் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது தேனி மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி மதுரை, விருதுநகர், நெல்லை போன்ற வெளிமாவட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மேலும் பா.ஜ.க நிர்வாகிகளும் கலந்து கொண்டு அவருக்கு சால்வை போர்த்தி வரவேற்பு தெரிவித்தனர். அப்போது ஒரு பா.ஜ.க நிர்வாகி ஓ.பன்னீர்செல்வத்திற்கு காவிதுண்டு அணிவித்ததால் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. பா.ஜ.க மாநில ஊரகவளர்ச்சி பிரிவு துணைத்தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் தேனி மாவட்ட தலைவர் பாண்டியன் உள்பட ஏராளமான பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வரவேற்பு தெரிவித்தனர். இன்று 2-வது நாளாக பண்ணைவீட்டில் ஆலோசனை மேற்கொண்டுவரும் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சென்னை செல்ல முடிவு செய்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். சென்னையில் அ.தி.மு.க நிர்வாகிகள் நடத்த உள்ள கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தலாம் என்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.