• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

விருத்தாச்சலத்தில் பஞ்சலோக சிலைகளை திருடியவர்கள் கைது..!

Byவிஷா

Jun 24, 2022

தமிழக கோவிலில் இருந்து திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்த திட்டமிடப்பட்ட இரு பஞ்சலோக சிலைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மீட்டனர். இரு கடத்தல்காரர்களை கைது செய்துள்ளனர்.
பழங்கால கோவில்களில் இருந்து திருடி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட மற்றும் விற்பனை செய்யப்பட்ட புராதன சிலைகளை மீட்க தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் விருதாச்சலம் பகுதியில் உள்ள மகிமைதாஸ் என்பவரது வீட்டில் இரு பஞ்சலோக சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் மகிமைதாஸ் சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், அந்நபரின் வீட்டில் 1 3ஃ4 அடி உயரமுள்ள ஐந்து தலை நாகத்துடன் கூடிய மாரியம்மன் சிலை மற்றும் சுமார் 1 அடி உயரமுள்ள பெருமாள் சிலை இருப்பதும், அச்சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்த அல்லது விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு, அங்கு வைக்கப்பட்டுள்ளதும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.


மேலும், சிலைகளை வாங்கும் நபர்களை கடத்தல் கும்பல் தேடி வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி. ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் விலை உயர்ந்த பழங்காலச் சிலைகளை வாங்குபவர்கள் மற்றும் சேகரிப்பவர்கள் போல் நாடகமாடி கடத்தல் கும்பலை தொடர்புகொண்டனர். சுமார் 2 கோடி ரூபாய் வரை பேரம் நடத்திய பின் கடத்தல் கும்பலைச் சேர்ந்த மகிமைதாஸ் சிலைகளை வாங்க வருபவர்கள் போல் நடித்த தனிப்படை போலீசார் சந்திக்க முன்வந்தார். அந்த நேரத்தைப் பயன்படுத்தி சிலை கடத்தல் நபரான மகிமைதாஸ் என்பவரை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுப் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து சிலைகளை மீட்டனர்.
அதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் மகிமைதாஸிடம் மேற்கொண்ட விசாரணையில், விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த மகிமைதாஸின் கூட்டாளி பச்சமுத்து என்பவரால் தமிழக கோவிலில் இருந்து பழங்கால வெண்கல சிலைகள் இரண்டும் திருடப்பட்டதும், அதன் பின் வெளிநாடுகளுக்கு கடத்த அல்லது விற்பனை செய்வதற்காக மகிமைதாஸிடம் கைமாறியதும் தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து மகிமைதாஸ் அளித்த தகவலின் அடிப்படையில் அவனது கூட்டாளியான பச்சமுத்து, ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியில் வைத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலைகள் கடத்தப்பட்ட கோவில் தொடர்பாகவும், சிலைகளின் தொன்மை தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், சிலை கடத்தல் கும்பலைச் சேர்ந்த மீதமுள்ள நபர்களையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.