விழுப்புரம் பெட்ரோல் பங்கில் மதுபோதையில் இளைஞர்கள் தகராறு செய்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தை அடுத்துள்ள ஜானகிபுரம் அருகே இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று இரவு ஜானகிபுரம் அடுத்த கண்டம்பாக்கம் கிராமப் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் இரண்டு இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளனர். அப்போது பெட்ரோல் நிரப்பியும் நீண்ட நேரமாக வாகனத்தை எடுக்காததால் பெட்ரோல் பங்க் மேலாளர் கார்த்தி வாகனத்தை அப்புறப்படுத்தும் படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மதுபோதையில் வந்த இளைஞர்கள் மேலாளரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது தடுக்கச் சென்ற டீசல் நிரப்ப வந்த லாரி ஓட்டுனர் ஹரி ராமன் மற்றும் இளஞ்செழியன் ஆகியோரையும் அந்த இளைஞர்கள் தாக்கியுள்ளனர். மேலும் அங்கு வந்த போதை இளைஞர்களில் ஒருவர் பெட்ரோல் போடும் இயந்திரங்களை இரும்பு மணல் வாலி கொண்டு உடைத்து இயந்திரங்களில் இருந்து வரும் பம்புகளை எடுத்து தரையில் அடித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் பெட்ரோல் போட வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. மதுபோதையில் பெட்ரோல் பங்கில் தகராறு செய்த இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்