தேனி அருகே உள்ள வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கடந்த செவ்வாயன்று தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவை காண தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை மகிழ்விப்பதற்காக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடும் வகையில் சுமார் 28 வகையான ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ராட்டினத்தில் உதவியாளராக தினக்கூலி வேலை பார்த்து வந்த வீரபாண்டியை அடுத்துள்ள உப்பார்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார்(32) என்ற இளைஞரின் மீது நேற்று மின்சாரம் பாய்ந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அடுத்து அனைத்து ராட்டினங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று திண்டுக்கல் மின்வாரிய ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான மின் வாரியத்தினர் .
இன்று ராட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் இணைப்புகள் மற்றும் மின் விளக்குகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்புகள் குறித்து முழுமையாக ஆய்வு நடத்தினார்கள்.
மேலும் ராட்டினத்தின் அருகே அமைக்கப்பட்டிருந்த அனைத்து உயர் கோபுர மின் விளக்குகளையும் ராட்டினத்தில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியை நோக்கி மாற்றி அமைக்க உத்தரவிட்டனர்.
மின்வாரியத்தினரின் ஆய்வுகளின் முடிவில் அவர்கள் அளிக்கும் அறிக்கையைத் தொடர்ந்து தொடர்ந்து ராட்டினங்கள் இயக்க அனுமதி அளிக்கப்படுமா? அல்லது ராட்டினங்கள் இயக்குவதற்கான தடை நீடிக்குமா? என்பது தெரியவரும்.
ஆற்றில் நீராடி சுவாமியை தரிசித்து சில மணி நேரங்கள் பொழுதுபோக்காக திருவிழாவில் கலந்துகொண்டு செல்லலாம் என்று இருந்த பக்தர்களுக்கு ராட்டினங்கள்
நிறுத்தப்பட்டது, ஒருபுறம் வேதனையாக இருந்தாலும், மறுபுறம் மீண்டும் ஏதாவது ஆபத்து நேருமோ என்று பயமும் கலந்து இருப்பதால் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.