மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கு ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மதுரை புது நத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் அருகேயுள்ள இணைப்பு பாலத்தின் ஒரு பகுதி கடந்த ஆகஸ்ட் 28 மாலை இடிந்து விபத்திற்கு உள்ளானதில், ஒரு தொழிலாளர் உயிரிழந்தார்.இந்த விபத்து தொடர்பாக இதுவரை மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ளும் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட JMC projects இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் பிரதீப் குமார் ஜெயின், கட்டுமானப்பணிகள் பொறியாளர் சத்தியேந்தர் வர்மா, ஹைட்ராலிக் மெஷின்கள் ஒப்பந்த நிறுவனத்தின் பொறுப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே அவர்கள் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டு சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். விபத்திற்கான காரணம் குறித்து திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையிலான குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.
அதன்படி, திருச்சி தேசிய தொழில்நுட்ப கழக பேராசிரியர் பாஸ்கர் தலைமையில் 3 வல்லுனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு குழுவில், கேரளாவை சேர்ந்த NATPAC என்ற கட்டுமான நிறுவனத்தின் போக்குவரத்து நுட்ப பொறியாளர் சாம்சன் மாத்தீவ் மற்றும் டெல்லியை சேர்ந்த மேம்பால கட்டுமான ஆலோசகர் அலோக் போமிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட்30ம் தேதி திருச்சி என்.ஐ.டி பேராசிரியர் பாஸ்கர் மட்டும் நாரயரணபுரம் அருகே விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
விபத்து குறித்து நேரில் ஆய்வு நடத்தி தொழில்நுட்பம் மற்றும் ஒப்பந்த நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம் எனவும் ஒப்பந்த நிறுவனத்தார், திட்ட பொறியாளர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்திய பின்னர் விபத்திற்கான காரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்தார். ஹைட்ராலிக் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் இயந்திரத்தின் பராமரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்த வேண்டியும் மற்றும் விபத்து ஏற்பட்ட போது யார் யார் பணியில் இருந்தார்கள் என்று விசாரித்து அவர்களின் விளக்கங்களை விரைவில் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்வோம் என தெரிவித்தார்.