நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சையது. இவர் அதே பகுதியில் குமாரபாளையம் செல்லும் சாலையில் கடந்த 10வருடங்களாக செல்போன் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று செல்போன் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை கடையை திறக்க சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்டு விற்பனைக்கு வைத்திருந்த 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 5 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் 5000 ரூபாய் ரொக்கம் ஆகியவை திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து பள்ளிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் அருகிலுள்ள ரவிக்குமார் என்பவரது மற்றொரு செல்போன் கடையின் பூட்டை உடைத்தும் கொள்ளையர்கள் திருட முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முக்கிய பகுதியில் அமைந்துள்ள அடுத்தடுத்த செல்போன் கடைகளில் அரங்கேறியுள்ள கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி அப்பகுதி வணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.