மதுரை சுந்தர்ராஜன் பட்டியில் உள்ளது அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நடைபெறும் மகா பூஜை மிகவும் பிரபலமானது. அந்தவகையில் சுந்தரராஜன் பட்டியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் இங்கு சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டு அம்மனின் அருள்பெற்று வருகின்றனர்.
தற்போது கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட முதல் கால யாக பூஜைகள் நடைபெற்று இன்று காலை இரண்டாம் கால யாக பூஜை, சுபாஷினி பூஜை, சுஹாசினி பூஜை, கோ பூஜை பூர்ணாகுதி நடைபெற்றது.
சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி கோவிலின் அம்மன் விமானத்திற்கும், மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்ததும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுந்தர்ராஜன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.