தலைவாசல் அருகே லாரி மீது அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே சம்பேரி பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் நேற்று அதிகாலை 5 மணிக்கு சாலையோரம் சிமெண்டு லோடு ஏற்றி வந்த லாரியும், அதன் அருகிலேயே டேங்கர் லாரி ஒன்றும் நின்று கொண்டிருந்தன. அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வந்த கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சிமெண்ட் லோடு லாரி மீது வேகமாக மோதியது.
இந்த கோர விபத்தில் அரசு பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த ஆத்தூர் போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பேருந்து ஓட்டுநர் பழனிசாமி, நடத்துனர் மாதையன் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்து குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.