நாம் அறியாத பல விஷயங்கள் ஆன்மீகத்தில் அடங்கியுள்ளது. இதை அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் எடுத்துக்கொள்ளலாம். சிலர் இதை அறிந்திருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்த ஆன்மீக விஷயமாகும்.
எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்விஷயம் பலருக்கு ஆச்சர்யமூட்டும். இந்தியாவில் உள்ள பிரபலமான சில சிவன் கோவில்கள், மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது. கேதார்நாத்திலிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் ஒரு அறியாத மர்மமாகவே இருந்து வருகிறது.
பஞ்சபூத ஸ்தலம்
பஞ்சபூதம் என்பது நிலம் , நெருப்பு, நீர், ஆகாயம் மற்றும் காற்றை குறிக்கும். அந்த பஞ்சபூதத்தையும் நினைவு கூறும் விதமாக இந்த 5 சிவன் கோவில்களும் அமைந்துள்ளது.
நிலம் – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
நெருப்பு – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்
நீர் – திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்
ஆகாயம் – சிதம்பரம் நடராசர் கோயில்
காற்று – திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்
ஆயிரம் ஆண்டுகள் பழைமை :
சிவனின் இந்த பஞ்சபூத ஸ்தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேதார்நாத்:
இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude ) அமைந்திருப்பது நம்மை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும். இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது.
ஏனைய சிவாலயங்கள்:
கேதார்நாத் முதல் காலேஷ்வரம் வரை இடையே இன்னும் பல சிவாலயங்கள் இதே நேர்கோட்டில் தீர்க்கரேகையில் அமைந்திருக்கலாம் எனவும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.